1997 ஆம் ஆண்டு உலகமே இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் ஒரு லட்சியத் திட்டம் துவங்கப்பட்டது. புதிய மைல்கல்களை அமைக்கும் நோக்கில் ஒரு வரலாற்று காவியமாக உருவாக இருந்தது மருதநாயகம். ரூ. 85 கோடி (இன்று ரூ. 600 கோடிக்கு மேல்) என்ற பிரமாண்டமான பட்ஜெட்டுடன், இந்தப் படம் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பிரமாண்டமான தொலைநோக்குப் பார்வை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இருந்தபோதிலும், இத்திட்டம் முழுமையடையவில்லை.

கமலுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
மருதநாயகம் படம் ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இருவரும் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். பின்னர் மருதநாயகமாக நடிக்கும் வாய்ப்பு கமலுக்கு சென்றது. அவர் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அதன் தயாரிப்பிலும் ஆழமாக ஈடுபட்டிருந்தார்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் கதை
18 ஆம் நூற்றாண்டின் சுதந்திரப் போராட்ட வீரரான மருதநாயகம் பிள்ளையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அவரது எதிர்ப்பை பிரமாண்டமான போர் காட்சிகள் மற்றும் வரலாற்று ஆழத்துடன் சித்தரிப்பதை இந்த படம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
சர்வதேச அளவில் கிடைத்த ஆதரவு
இந்திய, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இந்த படம் துவங்கப்பட்டது.. ஒரு கட்டத்தில், ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக அணுகப்பட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மேலும், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியலால் தடம் புரண்ட திட்டம்
1998 ஆம் ஆண்டு போக்ரானில் இந்தியாவின் அணு ஆயுத சோதனைகள் இங்கிலாந்து உடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. இதனால் மருதநாயகம் படத்தை தயாரிக்கவிருந்த பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து விலகியது. இதனால் இத்திட்டம் நிதி நெருக்கடியில் சிக்கியது. அவர்களின் ஆதரவு இல்லாமல், படத்தின் பணிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
நனவாகாத கனவு
மருதநாயகம் படம் நிறைவடைந்திருந்தால், இந்திய சினிமாவில் தவிர்க்க இயலாத சாதனையாக இருந்திருக்கும். இன்று நாம் வியந்து பார்க்கும் பாகுபலி படம் கூட நெருங்க முடியாத இடத்தை பிடித்திருக்கும். ஆனால், ‘மருதநாயகம்’ இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய முடிக்கப்படாத படங்களில் ஒன்றாகவும், நனவாகாத ஒரு கனவாகவும் உள்ளது.
